More links

Saturday, March 12, 2016

கிழக்கில் விரியும் கிளைகள் - கடம்பும் முருகனும்

 
கடம்ப மரம் குறித்த ஓவியம்
கடம்ப மரம் குறித்த ஓவியம்
கண்களுக்குப் புலப்படாத தெய்வீக ஆற்றலைக் கடவுள், தெய்வம், அணங்கு என்ற பெயர்களால் பண்டைய தமிழர் சுட்டினர். இவற்றைத் தமிழரின் முதல் மற்றும் முக்கியப் பெருந்தெய்வமான முருகு என்ற முருகனுடனும் தொடர்புபடுத்தினர். (முருகன் சூரணங்கு, சூர் உறை வெற்பன் போன்ற அகநானூறு பாடல் வரிகளை நோக்கவும்). முருகனின் மலராகக் கடம்ப மலர் பண்டைய காலம் முதலே கருதப்பட்டுவருகிறது.
கடம்ப மலரைச் சூடுவதாலேயே முருகனுக்குக் கடம்பன் என்ற பெயரும் அமைந்தது. இந்தப் பெயர் தமிழகத்தின் மித்ரகைனா பார்விஃபோலியா என்ற நிஜமான கடம்ப மரத்தின் அடிப்படையில் பெறப்பட்டதாகும். பூவைச் சூடுவதோடு மட்டுமின்றி முருகன், கடம்ப மரத்தில் முருகன் இடம்பெறுவதாகவும் கருதப்பட்டது (கடம்பமர் நெடுவேள் பெரும்பாணாற்றுப்படை: 75).
முருகனை முன்னிட்டு வெறியாடும் பூசாரியான வேலன் கடம்பப்பூ மாலையை அணிந்தும், கடம்ப மலரைச் சூடியும் ஆடுவான் (வெண்போழ் கடம்புடன் சூடி… வேலன் வெறியர் வியன் களம் அகநானூறு 98: 16-18). இந்த வெறியாட்டம் மேற்கொள்ளப்படும் களங்களில் ஒன்றாகத் திருமுருகாற்றுப்படையில் கடம்ப மரத்தடி சுட்டப்பட்டுள்ளது.
ஏன் கடம்பு இல்லை?
பொதுவாக, எந்தவொரு தெய்வத்துக்கும் உரித்தான / பிடித்தமான ஒரு தாவரம்தான், அந்தத் தெய்வம் உறையும் கோவிலின் தலமரமாக அமைவது தமிழகக் கோயில்களின் முக்கியப் பண்பு. ஆனால், வியப்பளிக்கும் வகையில் முருகனின் அறுபடை வீடுகளாகக் கருதப்படும் எந்தக் கோயிலிலும் கடம்ப மரம் தலமரமாக இல்லை. மாறாக வேறு மரங்கள் உள்ளன. கல் ஆத்தி, மகிழமரம், நெல்லி (இரண்டு படை வீடுகளில்), நாவல், திருச்செந்தூருக்குத் தல மரம் இல்லை. இதர சிறப்பு பெற்ற முருகன் கோயில்களிலும் கடம்ப மரம் தலமரமாக இல்லை. வன்னி, நெல்லி போன்ற மரங்கள்தான் உள்ளன. எனினும், பல சிவன் கோயில்களில் கடம்ப மரம் தலமரமாக உள்ளது.
சரியான மீட்பு தேவை
மதுரைக்கு அருகில் வைகை ஆற்றங்கரையில் முன்பு காணப்பட்ட கடம்ப வனம் (பரிபாடலின் மொத்தமுள்ள 70 பாடல்களில் கிடைக்கப்பெற்றுள்ள 22-ல் 15 பாடல்கள் முருகனைப் பற்றியும் வைகை ஆற்றைப் பற்றியும் இருப்பதையும், இவற்றில் ஒருசில கடம்ப மரத்தைச் சுட்டியுள்ளதையும் நோக்க வேண்டும்) முற்றிலும் அழிக்கப்பட்டதால், தற்போது அதை மீண்டும் உருவாக்கத் தொடங்கப்பட்டுள்ள முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. என்றாலும், மித்ரகைனா பார்விஃபோலியாதான் உண்மையான கடம்ப மரமாகக் கருதப்பட்டு இந்த வனம் புதுப்பிக்கப்பட வேண்டும். நியோலமார்க்கியா கடம்பா என்ற தாவரத்தை வைத்தல்ல. பழமையான, உண்மையான கடம்ப மரம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அர்த்தபுரீஸ்வரர் கோயிலில் இன்னும் நிலைத்துக் காணப்படுகிறது.
உண்மைக் கடம்ப மலரும் மொட்டுகளும்

இப்போ நான் விவசாயி - எம்.பி.ஏ. படித்த மாட்டுக்கார வேலன்!

 
  • தான் வளர்க்கும் நாட்டு மாடுடன் ராஜ மார்த்தாண்டன்
    தான் வளர்க்கும் நாட்டு மாடுடன் ராஜ மார்த்தாண்டன்
‘நல்லா படிச்சு மார்க் வாங்கலேன்னா மாடு மேய்க்கத்தான் போகணும்’ என்று குழந்தைகளைக் கண்டிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம். ஆனால் நன்றாகப் படித்து பிளஸ் டூ தேர்வில் 93 சதவீதம் மதிப்பெண்களை எடுத்த ராஜமார்த்தாண்டனிடம், அவருடைய பெற்றோர்கள் ‘‘உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்கள்.
“எனக்கு மாடு வேண்டும்” என்றார் ராஜமார்த்தாண்டன். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி வைத்தது குடும்பம். தொடர்ந்து படித்துப் பொறியாளராகவும், ஜாம்ஷெட்பூரிலிருக்கும் புகழ்பெற்ற XLRI கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ.வும் படித்து முடித்தார்.
“மதுரை சட்டப்பேரவை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகியான என்னுடைய தாத்தா ஆர்.வி.சுவாமிநாதன். அவர்தான் எனக்கு முன்மாதிரி. ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் தாத்தாவின் பண்ணையில் இருந்தன. தாத்தாவை என்னுடைய ஆதர்சமாகக் கருதுவதால்தான் எம்.பி.ஏ. முடித்துவிட்டு மாட்டுக்கார வேலன் ஆனேன்” என்னும் ராஜமார்த்தாண்டன், தன் வாழ்க்கைக்கான அடித்தளமாகவே மாட்டுப் பண்ணையையும் விவசாயத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். சென்னை அருகே திருப்போரூரில் நாட்டு மாடுகள் பண்ணை மற்றும் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டுவரும் அவர் பேசியதிலிருந்து…
எந்தப் புள்ளியில் பொறியாளர் வேலையை விட்டுவிட வேண்டும் என்று தோன்றியது?
படிப்பை முடித்ததும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு யுண்டாய் கார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்தேன். வாழ்க்கையில் என்னவோ ஒன்று குறைவது போலிருந்தது. என்னைப் போன்றே நண்பர்கள் சிலருக்கும் தோன்றியது. முதல் கட்டமாகத் திருப்போரூரில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கினேன். சோளம், பயறு வகைகள், கீரைகள் பயிரிட்டேன்.
அதற்குப் பிறகும், மாட்டின் மீதான என்னுடைய ஈர்ப்பு அப்படியேதான் இருந்தது. காலையில் குடிக்கும் காபியிலிருந்து சாப்பாடுவரை எனக்கு எதுவுமே சம்பந்தமில்லாததுபோல் தோன்றியது. சுத்திகரிக்கப்பட்ட பால், பாலில் கலப்படம் என்று தினம் தினம் எவ்வளவோ செய்திகள். என்னால் முடிந்த அளவுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தரமான பாலை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்காவது கொடுக்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவே, ‘சுத் மில்க்’ நிறுவனத்தின் அடிப்படை.
விவசாயம் செய்ய யாரெல்லாம் உங்களுக்கு உத்வேகம் தந்தார்கள்?
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் மூலம் விவசாயத்தின் நுணுக்கங்களை எளிமையாகத் தெரிந்துகொண்டேன். எல்லோருக்கும் வாழ்க்கை முறையை வகுத்துத் தந்திருக்கும் நம்மாழ்வார் வழியைப் பின்தொடர்கிறேன்.
உங்கள் பண்ணையில் என்னவெல்லாம் செய்கிறீர்கள்?
சோளம், உளுந்து, காராமணி, கீரை, வாழை, முருங்கை ஆகியவற்றைப் பயிர் செய்கிறோம். எங்களுடைய மாடுகளுக்குத் தீனி போடுவதற்காகவே, மூன்று ஏக்கர் பரப்பில் புல்லையும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான CO4 தீவனப் புல் ரகம், தீவனச் சோளம் ஆகியவற்றை வளர்க்கிறோம். இதுதவிர ஆந்திர மாநிலம், மதனப்பள்ளியில் உள்ள நண்பர்களின் பண்ணையிலிருந்து வைக்கோல், புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு போன்றவற்றை வாங்கிக்கொள்கிறோம். ஜீவாம்ருதக் கரைசல் இயற்கைப் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை நாங்களே தயாரித்துக்கொள்கிறோம். பெரும்பாலும் வெளியிலிருந்து எந்த இடுபொருளையும் எங்கள் பண்ணையில் பயன்படுத்துவதில்லை.
நாட்டு மாடு வளர்ப்பதன் அவசியம், முக்கியத்துவம் என்ன? என்னென்ன ரக மாடுகளை வைத்திருக்கிறீர்கள்?
உயிர்ச்சூழல் சங்கிலி அறுந்துவிடாமல் பாதுகாப்பதில் மனிதர்களுக்கு உற்ற தோழமையுடன் இருப்பவை நாட்டு மாடுகள்தான். நாட்டு மாடுகளைப் பராமரிப்பது எளிது. பராமரிப்புச் செலவும் குறைவு. நம் நாட்டு சுற்றுச்சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் திறன் அயல் நாட்டு மாடுகளுக்கு இருக்காது.
நம் நாட்டுச் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை நம் நாட்டு மாட்டு இனங்கள்தான். அயல் ரக மாடுகளிலும் கலப்பின மாடுகளிலும் நோய் மூலக்கூறு கொண்ட A1 புரதம் இருக்கும். நம் நாட்டு மாட்டு ரகங்களில் இந்த வகையான புரதம் இருப்பதில்லை. பால் அதிகம் தருகிறது என்னும் காரணத்துக்காகவே அயல்நாட்டு ரகங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன.
உண்மையில் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள், திமில்கள் இருப்பதில்லை. அவற்றின் வியர்வை, பால் மற்றும் கோமயத்தின் மூலமாகவே வெளியாகிறது. இந்த அடிப்படையில் தரத்தைக் கணக்கிட்டால், நம் நாட்டு மாட்டு இனத்தின் பால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. நம் நாட்டிலேயே 40 இன மாடுகள் உள்ளன. இவற்றில் அதிகம் பால் கொடுப்பவை ஆறு இனங்கள். இதில் குஜராத்தின் கிர், கான்கிரேஜ், ராஜஸ்தானின் தார்பார்க்கர் ஆகிய இனங்களில் 20 மாடுகளை என்னுடைய பண்ணையில் வளர்க்கிறேன்.
உங்கள் பண்ணையில் கிடைக்கும் விளைச்சல், பொருட்களை எப்படி விற்பனை செய்கிறீர்கள்?
ஒரு நாளைக்குச் சராசரியாக 120 லிட்டர் பாலை அவை தருகின்றன. என்னுடைய `சுத் ஃபார்ம்’ நிறுவனம் மூலமாக ஒரு லிட்டர் 85 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். பழைய மகாபலிபுரச் சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நகர்ப் பகுதிகளில் அண்ணா நகர் வரையிலும்கூட எங்கள் பண்ணையின் பால் செல்கிறது. `நல்ல கீரை’ அமைப்பு, சில பசுமை அங்காடிகளில் எங்கள் பண்ணையின் பால் அன்றாடம் விற்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் விற்பனை செய்யும் பால், பனீர் போன்றவற்றின் சிறப்பம்சம் என்ன?
எங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பாலில், தண்ணீரைச் சேர்த்துப் பயன்படுத்தினாலும், தரம் நன்றாக இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். பாலைப் பொறுத்தவரை அன்றாடம் 120 லிட்டருக்கு அதிகமாகவும்கூட எங்களிடம் கேட்கிறார்கள். ஆனால், உடனடியாக உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் இல்லை. எங்களுடைய பால் பொருட்களான பனீர், இயற்கை விவசாய விளைபொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்தப் பண்ணைக்குத் தேவைப்பட்ட முதலீடு, லாபம் பற்றி சொல்லுங்கள்?
இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் பண்ணையில் வேலை செய்கிறார்கள். ஒரு குதிரையும் வைத்திருக்கிறேன். புல்கட்டுகளையும் விவசாயத்துக்குத் தேவையான அன்றாட வேலைகளையும் செய்வதற்குக் குதிரை வண்டியைப் பயன்படுத்துகிறோம்.
ஏழு ஏக்கருக்கான பயிரிடும் செலவு, மாட்டுப் பண்ணை பராமரிப்பு, பண்ணையாட்களுக்கு ஊதியம் எல்லாம் சேர்த்தால் மாதம் சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். பாலின் மூலமாகவும், தானியங்கள் மூலமாகவும் சராசரியாக மூன்று லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. செலவு போக, மாதம் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
ஒரு விவசாயியாக மாறியதால் கிடைத்த தனித்தன்மையான விஷயங்கள்?
அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. என்ன படித்து, என்ன பெரிய வேலையில், எவ்வளவு அதிகமாகச் சம்பளம் வாங்கினாலும் நமக்குப் பிடித்த வேலையைச் செய்யும் சந்தோஷத்துக்கு ஈடு இணையே இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சந்தோஷமான வாழ்க்கையை ஒரு விவசாயியாக, ஒரு மாட்டுப் பண்ணைக்காரனாக நான் வாழ்கிறேன். தலைகீழாக மாறிவரும் இந்த உலகில், இதைத் தனித்தன்மையான விஷயமாக நான் நினைக்கிறேன்.
உங்களைப் போலப் படித்துவிட்டு, விவசாயத்துக்கு வருபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
விவசாயம் என்பதும் ஒரு தொழில்தான் என்பதைப் புரிந்துகொண்டு வர வேண்டும். இதில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன் சில வருடங்கள் அல்லது சில மாதங்களாவது விவசாயப் பண்ணையில் நேரடியாகத் தங்கிப் பயிற்சி பெற வேண்டும். எந்த வேலையிலும் ஓய்வு இருக்கும். ஆனால் விவசாயம் செய்யும்போது, ஓய்வை எதிர்பார்க்க முடியாது. 24X7 உழைப்பதற்கு நேரத்தைச் செலவிடத் தயாராக இருக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தாமல் பணத்தை மட்டும் முதலீடு செய்வதைவிட, பணத்துடன் உழைப்பதற்குத் தயாராக இளைஞர்கள் வர வேண்டும்.
ராஜ மார்த்தாண்டனைத் தொடர்புகொள்ள: 9841411170

உடலியல் கல்வி - பரவலாகும் மூடநம்பிக்கைகளும் பேசப்படாத உண்மைகளும்!

 
ஒரு காலத்தில் பகிரங்கமாகப் பார்ப்பதோ, படிப்பதோ தவறு என்று கருதப்பட்ட நிலை மாறி இன்றைக்கு இணையதளங்கள், பத்திரிகைகள், கேபிள் டிவி, குறுந்தகடுகள், புதினங்கள், கைபேசிகள் என்று பல்வேறு விதமான ஊடகங்களின் மூலம் பாலியல் தகவல்கள் கிடைத்துவருகின்றன. இது குறித்து 40 லட்சத்துக்கும் மேலான இணையதளங்களும், 37 கோடிக்கும் மேலான இணையப் பக்கங்களும் இருக்கின்றன, ஒரு நாளைக்கு 25 லட்சம் மின் அஞ்சல்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிகிறது. உலகில் மொத்தமுள்ள இணையதளங்களில் இவை 12 சதவீதம் இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஒரு நாளைக்கு 6.8 கோடிப் பேர் இந்தச் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட இணையதளங்கள் ஓர் ஆண்டுக்கு ரூ. 2,85,000 கோடி வருமானம் ஈட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. இப்படிப்பட்ட இணையதளங்களின் மூலம் அமெரிக்காவுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 60,000 கோடி வருமானம் கிடைப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இப்படிப் பாலியல் சார்ந்து இயங்கும் இணையதளங்கள் குறித்த செய்திகள் அதிர்ச்சியளித்தாலும், இத்தகைய சூழலிலிருந்து வளர்இளம் பருவத்தினரை மீட்பதும், அவர்களை முறைப்படுத்துவதும் சமூகத்தின் கடமை.

பேராபத்தை எதிர்நோக்கும் இந்தியா

இந்தியாவில் மக்கள் தொகை மட்டும் அதிகமல்ல. பதின் வயது கர்ப்பம் மற்றும் எச்.ஐ.வி. / எயிட்ஸ் தொற்றும், குழந்தைகள் மற்றும் பெரியவர் மத்தியில் பாலியல் பலாத்காரங்களும் அதிக விகிதங்களில் இருக்கின்றன என்பதுதான் அதிர்ச்சியூட்டும் தகவல்.

இந்தியாவில் 1000-க்கு 62 பேர் பதின் பருவத்தில் கர்ப்பமாகிறார்கள். இது அமெரிக்காவைவிட இரண்டு மடங்கு, இங்கிலாந்தைவிட மூன்று மடங்கு, ஐரோப்பாவை விட பத்து மடங்கு, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைவிட அதிகம்.

இந்தியாவில் 15 வயதுக்கு முன்பே 18 சதவீதப் பெண்களுக்குத் திருமணமாகிவிடுகிறது. 47 சதவீதம் பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணமாகிறது. இதற்கு உடல் இயக்கங்களைப் பற்றிய அறிவு இல்லாததும், பழைய நடைமுறை களைப் பின்பற்றுவதும், பாலியல் நலத்தின் அடிப்படையிலான தேர்வு, கருத்தடுப்பு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததுமே காரணம்.

இவற்றால் ஏற்படும் ஒரு பாதிப்பைப் பார்த்தால், பிரச்சினையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். நாட்டில் 24.7 லட்சம் பேர் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உரிய வழிகாட்டுதல்களும் விழிப்புணர்வுக் கல்வியும் இருந்திருந்தால், இவர்களில் பெரும்பாலோரைப் பாதிப்பிலிருந்து தடுத்திருக்கலாம்.

உடலியல் கல்வியின் அவசியம்

உடலியல் கல்வி, பாலியல் கல்வி, பாலியல் நலக் கல்வி, உறவுமுறைக் கல்வி போன்ற அனைத்தும் ஒரே வகையானவைதான். பாலியல் சார்ந்த தகவல்களைப் பெறவும், பாலியல் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகள், அணுகுமுறைகள், பாலியல் அடையாளம், உறவுகள் மற்றும் நெருக்கம் ஆகியவற்றைப் பற்றி புரிய வைப்பதே இந்தக் கல்வியின் அடிப்படை நோக்கம்.

இளைஞர்கள் அவரவர் விரும்பும் நடத்தைகளுக்கேற்பத் தன்னம்பிக்கையோடும் தகுதியோடும் செயல்பட உடலியல் கல்வி அல்லது உறவு முறைக் கல்வி திறன்களை வளர்க்கிறது. பாலியல் சார்ந்த துஷ்பிரயோகம், சுரண்டல், திட்டமிடப்படாத கருவுறுதல், பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி./ எயிட்ஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இது இளைஞர்களுக்கு உதவுகிறது. அதற்கெல்லாம் மேலாக அவர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள், தேவைகளை நிறைவு செய்யவும் இது உதவும் என்பதில் சந்தேகமில்லை.

ஏன் தேவை?

உடலியல் கல்வி என்பது ‘தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவது எப்படி?' என்பதைச் சொல்லிக்கொடுப்பதல்ல. மாறாக உடல்ரீதியான, சமூகரீதியான, உயிரியல்ரீதியான விவரங்களைத் தெரிந்துகொள்வதன்மூலம் வருங்காலத்தில் அவர்களுடைய பாலியல் நலனைப் பேணிப் பாதுகாக்க உதவுகிறது.

ஆண், பெண் இரு பாலரின் உடலமைப்பைப் புரிந்துகொள்வதற்கும், குழந்தை பிறப்பைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வதற்கும் உதவுகிறது. ஒருவர் தன்னுடைய பாலினப் பொறுப்புகளை உணரவும் பாலின அறிவை வளர்த்துக்கொள்ளவும், ஒவ்வொரு பாலினமும் உடல் ரீதியாக எப்படி மாறுபட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவும்.

வளர்இளம் பருவத்தினர் ஒவ்வொருவரும் மன ரீதியாக எப்படி மாறுபட்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லித்தர வேண்டிய அவசியம் இருக்கிறது. அதோடு வளரும்போது அவர்களுக்குள் ஏற்படும் உறவு முறைகள் பற்றியும் சொல்லித்தர வேண்டியது அவசியம்.

வளர் இளம் பருவத்தினர் இயற்கையாகவே பாலியல் விவரங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கு அறிவியல் ரீதியாகச் சரியான தகவல்களைக் கற்றுத்தராவிட்டால், நண்பர்கள், படங்கள், இணையதளங்கள் வழியாக அரைவேக்காட்டுத்தனமான தவறான கருத்துகளே அவர்களை ஆக்கிரமிக்கும். அது எவ்வளவு ஆபத்தானது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா?

முகம் நூறு - இந்தியாவின் சாதனைப் பெண்!

 
வண்ணங்களைக் குழைத்துத் தான் வரைகிற ஓவியங்களையே சமூக மாற்றத்துக்கான கருவியாக மாற்றுகிற உத்தி கைவரப்பெற்றிருக்கிறார் ஸ்வர்ணலதா. அந்தத் திறமைதான் அவர் இந்தியாவின் நூறு பெண் சாதனையாளார்களில் ஒருவராகத் தேர்வுபெறக் காரணமாகவும் அமைந்திருக்கிறது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த நூறு பெண்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் தேர்வாகியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஸ்வர்ணலதா. தென்னிந்திய அளவில் இந்தப் பிரிவில் தேர்வாகியிருக்கும் ஒரே பெண் இவர்தான்.
சிங்கப்பூரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் இவர். விவரம் அறியாத வயதிலேயே அப்பா, அம்மா, சகோதரனை ஒரு பெருவிபத்தில் பறிகொடுத்துவிட்டு தன்னந்தனியாக நின்றார். உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. அதன் பிறகு சென்னை மருமகளாகிவிட்டார். ஏதுமறியாத இளம் பெண் என்பதால் பிறந்த வீட்டிலிருந்தே உதவிக்கு இரண்டு பெண்களை அனுப்பிவைத்தார்களாம்.
தனிமை போக்கிய ஓவிய ஆர்வம்
பிறந்த வீட்டில் திடீரென பறிகொடுத்துவிட்ட அன்பு அனைத்தும் ஸ்வர்ணலதாவுக்குப் புகுந்த வீட்டில் இரட்டிப்பாகக் கிடைத்தது. அன்பான கணவர், அனுசரணையான மாமியார், மாமனார் என அனைவரின் பாச வளையத்துக்குள் மகிழ்ச்சியாக இருந்தார் ஸ்வர்ணலதா. ஆனால் இவை மட்டுமே வாழ்வின் பூரணமா? இந்தக் கேள்விதான் ஸ்வர்ணலதாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றது.
“எனக்குச் சின்ன வயசுல இருந்தே படங்கள் வரையறது பிடிக்கும். நான் அப்பா, அம்மாவை இழந்துட்டு நின்னப்போ, ‘பாவம் இந்தப் பொண்ணு’ன்னு சில உறவுக்காரங்க ஆசையா பணம் கொடுத்துட்டுப் போவாங்க. அந்தப் பணத்துல நான் பெயிண்ட்டும் பிரஷ்ஷும்தான் வாங்குவேன். அப்படி ஆரம்பிச்சதுதான் என் ஓவியப் பயணம்” என்று சொல்லும் ஸ்வர்ண லதா, திருமணத்துக்குப் பிறகும் ஓவியங்கள் வரைவதைத் தொடர்ந்தார். யாரிடமும் முறையாக ஓவியம் கற்றுக்கொண்டதில்லை. 1993-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் இவர்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்க, அந்த வீட்டைத் தன் ஓவியங்களால் அலங்கரிக்க நினைத்தார் ஸ்வர்ணலதா. ரவிவர்மாவின் ஓவியங்கள் மீது ஸ்வர்ணா வுக்கு ஈடுபாடு அதிகம். அதனால் அந்தப் பாணி ஓவியங்கள் வரையத் தீர்மானித்தார்.
பாடம் சொன்ன கண்காட்சி
தன் மனைவியின் திறமைக்கு மேடை அமைத்துத்தர வேண்டியது தன் கடமை என நினைத்தார் வழக்கறிஞராகப் பணி யாற்றும் ஸ்வர்ணலதாவின் கணவர். அவரது முயற்சியால் 1998-ம் ஆண்டில் தன் முதல் ஓவியக் கண்காட்சியை நடத்தினார் ஸ்வர்ணலதா. கிட்டத்தட்ட அனைத்து ஓவியங்களும் விற்றுவிட, அடுத்த வருடமே இன்னொரு கண்காட்சி லலித் கலா அகாடமியில் நடந்தது. அங்கேதான் திறமையான பல ஓவியக் கலைஞர்களின் அறிமுகம் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்தது. அப்போதுதான், தான் இதுநாள் வரைந்துகொண்டிருந்தவை ஓவியங்கள் அல்ல. அவை வெறும் அடுத்தவர் பாணியை அப்படியே காப்பியடித்து வரைந்தவை என்பதையும் உணர்ந்துகொண்டார்.
“நான் பிளெயினான துணிகளை அணிந்ததில்லை. அதில் கூடுதலாக மணிகளை ஒட்டியோ, பூக்கள் வரைந்தோ அணிவேன். அதனால ஓவியத்துலயும் ஃபியூஷன் பண்ணலாம்னு நினைச்சு ரவிவர்மா ஓவியங்களையே தஞ்சாவூர் ஓவியப் பாணியில் வரைந்து வீட்டில் மாட்டினேன்” என்று தன் தூரிகையின் பாணி குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் ஸ்வர்ணலதா. ஒரு முறை ஸ்வர்ணலதாவின் வீட்டுக்கு வந்த அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் இவரது ஓவியங்களைப் பார்த்து வியந்திருக்கிறார். அவற்றைக் கண்காட்சியாக வைக்கலாம் என்று சொன்னதோடு கேரள அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி அதற்கு ஏற்பாடும் செய்துவிட்டார். ஆனால் சென்னையிலிருந்து அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று மாமனாரும் மாமியாரும் தயங்கியதால் அந்தக் கண்காட்சியில் ஸ்வர்ணலதா பங்கேற்கவில்லை.
“ஓவியக் கலைஞர்களுடனான சந்திப்பு, ஓவியங்கள் குறித்த என் பார்வையை மாற்றியது. ஓவியம் என்பது தனித்துவமானது, கற்பனைத்திறனும் புதுமைகளும் நிறைந்தது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகு எனக்கென ஒரு ஓவியப் பாணியை உருவாக்கிக்கொண்டேன். சிற்பக்கலை நிபுணர் குதிரை கருப்பையா அவர் களிடம் எடுத்துக்கொண்ட பயிற்சி அதற்குக் கைகொடுத்தது” என்கிறார் ஸ்வர்ணலதா.
வலியே வலிமை
இதற்கிடையே குழந்தையின்மைக்கான சிகிச்சை, மகப்பேறு, மகனை வளர்த்தல் என்று நாட்கள் காலில் இறக்கையைக் கட்டிக்கொண்டு பறந்தன. ஆனால் கிடைக்கிற சில நிமிடங்களிலும் ஓவியங்கள் வரைந்துவிடுவார் ஸ்வர்ணலதா. இவரது கணவர் பணி நிமித்தம் டெல்லியில் இருந்ததால் தன் மகனுடன் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்கே சென்றிருந்தார். அப்போது நிர்பயா வழக்கு குறித்த ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் உச்சத்தை அடைந்திருந்தன. அது இவரை வெகுவாகப் பாதித்தது.
“நிர்பயாவுக்கு நீதி கேட்டு நின்ற பெண்களின் முகங்கள் அனைத்திலும் நான் நிர்பயாவைப் பார்த்தேன். ஒவ்வொரு பெண்ணும் இந்தச் சமூகத்தால் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றியது. எல்லா முகங்களிலும் வலியும் வேதனையும் பரவியிருந்தன. அந்த முகங்களை, அவர்கள் குரலில் ஒலித்த கோபத்தை, நிர்பயாவின் வேதனையை ஓவியங்களாக வரைந்தேன்” என்று சொல்லும் ஸ்வர்ணலதாவின் ஓவியங்கள் அனைத்திலும் பெண்களே பிரதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு ஓவியமும் பெண்களின் வலியையும் வலிமையையும் சுமந்தபடி இருப்பதுதான் இவரது தனிச்சிறப்பு.
“கடந்த டிசம்பர் மாதம் என் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை என்று திண்டுக்கல் சென்றிருந்தோம். அப்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து என்னுடைய புகைப்படத்தை அனுப்பச் சொல்லி எனக்கு மெயில் வந்திருந்தது. ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் மனநிலையில் நான் அப்போது இல்லை. சில நாட்கள் கழித்து, இந்தியாவின் சிறந்த சாதனைப் பெண்கள் பட்டியலுக்கு நானும் தேர்வாகியிருப்பதாக தகவல் வந்தது. என் மாமனாரின் இழப்பால் அதைக் கொண்டாடும் மனநிலையில்கூட நாங்கள் இல்லை. ஆனால் பேஸ்புக்கில் பலரும் ஆதரவு தந்து என்னை வெற்றிபெற செய்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். வருகிற 22-ம் தேதி ஜனாதிபதியோடு மதிய விருந்து” என்று சொல்லும் ஸ்வர்ணலதா, ஓவியங்கள் மூலம் கிடைத்த வருமானம் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவி வருகிறார்.
ஸ்வர்ணலதா

வானவில் பெண்கள் - வில்லாக வளையும் சாதனை சகோதரிகள்!!!

 
படம்: எஸ். குருபிரசாத்
ஜிம்னாஸ்டிக் பயிற்சியை வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட ஈர்ப்பும் ஆர்வமும் சேலத்தைச் சேர்ந்த சகோதரிகளை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. ஜிம்னாஸ்டிக் மீது ஆர்வம் வைத்த இந்தச் சகோதரிகள், பல தடைகளைத் தாண்டித்தான் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள்.

விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பது என்பது அசாதாரண விஷயமல்ல என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால் விளையாட்டுக்கு ஆதாரமான உடல் வலிமையைத் தரும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்குக்கூட வழியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சாதனை சாத்தியமா? இப்படியொரு கேள்விதான் உமாமகேஸ்வரிக்கும் சுவாதிகாவுக்கும் தோன்றியது. ஆனால் அந்தக் கேள்விக்கு அடுத்து என்ன என்ற அவர்களின் தேடல் அவர்களுக்கு இன்று தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறது.

சேலம் மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சிவக்குமாரின் மூத்த மகள் உமா மகேஸ்வரி (17). இவர் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கிறார். இவரது தங்கை சுவாதிகா (12), அதே பள்ளியில் 7-ம் வகுப்பும் படிக்கிறார்.

சுட்டித்தனம் நிறைந்த இந்தச் சகோதரிகள் படிப்பிலும் திறமைசாலிகள்.

இவர்கள் விளையாடுவதற்காகத் தங்கள் அப்பாவுடன் சேலம் காந்திவிளையாட்டு மைதானத்துக்கு வந்தபோது அங்கு நடந்த ஜிம்னாஸ்டிக் பயிற்சியை பார்த்தனர். பார்த்ததுமே அவர்களுக்கு ஜிம்னாஸ்டிக்கைப் பிடித்துவிட்டது.

இவர்களின் ஆர்வத்தை அறிந்த ஜிம்னாஸ்டிக் பயிற்றுநர் ஜெயமோகன், இவர்களுக்குப் பயிற்சியளித்தார். இவர்களின் அசாத்திய திறமையை உணர்ந்த ஜெயமோகன், சகோதரிகளின் தந்தையிடம் பேசி இருவரையும் இந்த விளையாட்டில் முழு அளவில் ஈடுபடுத்தினார்.

வலிமையே எல்லை!

ஜிம்னாஸ்டிக் கலை என்பது மனோ வலிமையை மேம்படுத்தும் விளையாட்டாக கிரேக்கர்கள் அறிமுகம் செய்தனர். ஆரம்பத்தில் ஆண்கள் மட்டும் இந்த விளையாட்டில் ஈடுபட்ட நிலையில், பெண்களின் உடல்வாகு காரணமாக இந்த விளையாட்டில் பெண்களும் சாதனைகளைப் படைக்கத் தொடங்கினர்.

இன்று உலக அளவில் பிரபலம் அடைந்துள்ள ஜிம்னாஸ்டிக் கலையில் சேலம் சகோதரிகளின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது.

பதக்கப் பட்டியல்

உமாமகேஸ்வரியும் சுவாதிகாவும் தங்கள் அபாரத் திறமையால் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் அடுத்தடுத்து சாதனை படைத்தனர். 12 வயதில் பயிற்சியில் ஈடுபட்ட உமாமகேஸ்வரி, மாவட்ட மற்றும் மாநில அளவில் தலா 18 பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். தேசியப் போட்டியில் பங்கேற்ற அவருக்கு வெற்றி எட்டவில்லை என்றாலும், தனது திறமையால் அந்த இலக்கை விரைவில் எட்டுவேன் என்ற தன்னம் பிக்கையோடு கூடுதல் பயிற்சியில் களம் இறங்கியுள்ளார்.

இதே போல் ஆறு வயதில் பயிற்சியில் ஈடுபட்ட சுவாதிகா, மாவட்ட அளவில் 18 பதக்கங்களையும், மாநில அளவில் 16 பதக்கங் களையும் பெற்றுச் சாதனை படைத்திருக் கிறார்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளும் விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்ததுடன் மற்ற மாணவிகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளனர்.

அச்சம் தவிர்

“ஜிம்னாஸ்டிக் மீது எங்களுக்கு இருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட எங்க அப்பா எங்களுக்கு ஊக்கம் அளித்தார்.

ஜெயமோகன் சார் அளித்த பயிற்சியால் இன்று தேசிய போட்டிகளைச் சந்திக்கும் வகையில் வளர்ந்துள்ளோம். ஆரம்பத்தில் சுவாதியைத் தூக்கி தலைமேல் வைத்து பயிற்சியில் ஈடுபடும்போது பலமுறை கீழே விழுந்து அடிபட்டபோது எனக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் அதையே சவாலாக நினைத்து பயிற்சி பெற்றதால் சாதனை படைக்க முடிந்தது.

மாவட்ட, மாநில சாதனைகள் தொடர்ந்தாலும், தேசிய சாதனை நாளை எதிர்பார்க்கிறேன்” என்கிறார் உமாமகேஸ்வரி.

வழிகாட்டல் வருத்தம்

தனது வெற்றியை நம்மிடம் பகிர்ந்துகொண்ட சுவாதிகா, “நான் 3-ம் வகுப்பு படிக்கும் போதே பயிற்சியில் ஈடுபட்டேன். தொடக்கத்தில் எனக்குள் இருந்த பயத்தை என் அக்கா போக்கினாள். பல்வேறு போட்டிகளுக்கு அக்காவுடன் சென்றதால் பயம் நீங்கியது. எங்களோட இந்த ஆர்வத்துக்குப் பள்ளி அளவில் வழிகாட்டுதல் இருந்தால் எங்களால் இன்னும் நிறைய சாதிக்க முடியும்.

மார்ச் மாதம் நடக்கும் சர்வதேசப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதுதான் அடுத்த இலக்கு” என்று உற்சாகத்தோடு சொன்னார்.

Keywords: சேலம் சகோதரிகள், ஜிம்னாஸ்டிக்ஸ் சகோதரிகள், ஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை, சாதனைப் பெண்கள், விளையாட்டில் சாதனை, உமா மகேஸ்வரி, சுவாதிகா

கைபேசியைக் கீழே வையுங்கள், பயத்தை நேருக்கு நேர் சந்தியுங்கள்!

 
ரயிலில் ஒரு சாண்ட்விச் வாங்கும்போது சொல்ல முடியாத அளவுக்குப் பதற்றம் ஏற்பட்டது. தடுமாறினேன், துழாவினேன். எனக்குப் பின்னால் நின்றவர்கள் என்னால் சற்றே பொறுமை இழந்துபோனார்கள். என் நெற்றியில் வியர்த்து வடிந்தது. கழுத்து, முதுகு, கக்கம், கைகள், கால்கள், தாடை என்று உடல் முழுதும் வேர்த்து வடிந்தது.

சாதாரண வெப்பநிலைதான் அங்கே இருந்தது என்பதால் இவ்வளவு வியர்வைக்கு எந்தக் காரணமும் இல்லை. ரயிலும் நிதானமாகவே சென்றுகொண்டிருந்ததால் என் தடுமாற்றத்துக்கும், கால்களின் நடுக்கத்துக்கும் எந்தக் காரணமும் இல்லை. அதே போல் தலைசுற்றலுக்கும் எந்த அவசியமுமில்லை. குறுகலான குகை வழியேயும் ரயில் சென்றுகொண்டிருக்கவில்லை. கைகளில் எந்தக் குடைச்சலும் இல்லை.

எனக்குப் பசியும் இல்லை என்பதால் சாண்ட்விச் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. இப்படியாக எந்தக் காரணமும் இல்லாமல் எனக்கு எல்லாமும் நடந்துகொண்டிருந்தது. ஏனென்றால், எனக்கு ‘பீதித் தாக்குதல்’ (Panic attack) ஏற்பட்டிருக்கிறது; அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ செய்துகொண்டிருந்தேன். (இனம்புரியாத பதற்றமும் பீதியும் திடீரென்று உச்சத்துக்கு சென்று, நம்மை நிலைகுலைய வைப்பதற்கு ‘பீதித் தாக்குதல்’ என்று பெயர்).

எப்போதும் உள்ள பதற்றம்தான். சில வாரங்களாக மேலும் அதிகரித்துக்கொண்டிருந்தது. ‘இந்த இடத்தில் போயா நான் பீதித் தாக்குதலுக்கு உள்ளாவது’ என்று ரயில் புறப்பட்ட அடுத்த நொடியே நான் நினைத்துப் பார்த்தேன். ஆனால், எனது மூளையோ, “எந்த இடத்தையும் விட மோசமான இடம் இல்லை இது; அதேபோல் பீதித் தாக்குதல் உள்ளாவதற்கு எந்த நியாயமும் இல்லை” என்று சொன்னது. ஆனால், எந்த சமாதானத்தையும் காரணத்தையும் ஏற்றுக்கொள்ளாத எனது மனதின் இன்னொரு பக்கம் போட்ட சத்தத்தால் எனது அறிவு அடங்கிப்போனது. எனது உடல் முழுவதும் ‘அட்ரீனலின்', ‘விர்'ரென்று ஏறியது.

ரயிலில் உள்ள உணவு விற்பனைப் பிரிவுக்குப் போனதும் கூட ஒரு தப்பித்தல் முயற்சியாகத்தான். என்னிடமிருந்தே தப்பிப்பதற்கு, எனது எண்ணங்களிடமிருந்து, என்னுடைய மனதிடமிருந்தே தப்பிக்கும் முயற்சிதான் அது. மூச்சுப் பயிற்சி, மனஅமைதிக்கான ‘சிடி' உபன்யாசங்கள் போன்ற வழிமுறைகளெல்லாம் எனக்கு எப்போதும் பயனளித்ததே இல்லை. என்ன செய்தாலும் எனது கவனத்தை ஒருமுகப்படுத்த முடியவே இல்லை.

ஆனால், மற்றவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதால் ஒரு ஆறுதல் கிடைக்கும். ஆகவே, புன்சிரிப்புடன் தோன்றக்கூடிய அந்நியரின் பார்வை ஏதும் எனக்குக் கிடைக்குமா என்று தேடினேன். நட்போடு சிரிக்கக்கூடிய நடுத்தர வயதுப் பெண் என்றால் நல்லது. நாம் இருக்கும் பதற்ற நிலையில் அப்படிப்பட்ட பெண்ணைப் பார்க்கும்போது ஒரு தாயைப் பார்க்கும் உணர்வு கிடைக்கும். ஒரு முதியவரின் புன்னகை நமக்கு நமது தாத்தாவை நினைவுபடுத்தக்கூடும். ஒரு கவர்ச்சிகரமான நபரைப் பார்ப்பதையே நான் அதிகம் விரும்புவேன். யாரையெல்லாம் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளலாம்! ஆனால், எல்லோரும் கீழே குனிந்துகொண்டல்லவா இருந்தார்கள்.

தங்கள் கைபேசியையோ, மடிக்கணினித் திரையையோ, டேப்லெட்களையோதான் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த 'ஸ்பிரெட்ஷீட்'கள், ஃபேஸ்புக் போன்றவற்றின் பிம்பங்கள் அவர்களது நெற்றியில் பிரதிபலித்தன. எல்லோருடைய முகங்களும் நீல நிறத்திலோ சாம்பல் நிறத்திலோதான் தெரிந்தன. எனக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. எல்லாமே சாம்பல் நிறத்திலும் நிறமற்றதாகவும் தோன்ற ஆரம்பித்தன. எனக்கு நிலைதடுமாறியது. ஆதரவாக யாரும் இல்லாமலும் பற்றிக்கொள்ள ஏதும் இல்லாமலும் நான் மிதந்துகொண்டிருந்தேன்.

என் இருக்கைக்கு மீண்டும் வந்து அமர்ந்தேன். இனிமேல் என்னால் இயல்பாக இருக்க முடியாது என்ற சிந்தனை மட்டுமே எனக்கு ஏற்பட்டது. மனநல மருத்துவமனையில் கட்டிலில் சுருட்டிக்கொண்டு அடக்கமாகப் படுத்துக்கொள்ள விரும்பினேன். மருந்துகளைக் கொடுத்துவிட்டு, எல்லாம் சரியாகிவிடும் என்று யாராவது சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். நம்பிக்கை தரும் மனிதத் தொடர்பு ஒன்றுக்காக இறுதியாக ஒருமுறை சுற்றிலும் பார்த்தேன். ஏதுமில்லை. எனது இறுதிப் புகலிடமான எனது கைபேசியை வெளியில் எடுத்தேன். அடுத்த 50 நிமிடங்களை இன்ஸ்டாகிராம், டுவோலிங்கோ, ஸ்னாப்சாட், டிண்டர், ஃபேஸ்புக், யூடியூப் ஆகியவற்றில் சஞ்சரித்தேன். இப்படியாக, கணக்கற்ற இணையதளங்கள், கணக்கற்ற யூடியூப் வீடியோக்கள்…

பதற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் செய்யக்கூடிய மிக மோசமான செயல், ‘தவிர்த்தல்’தான். நமக்கு பதற்றத்தைத் தரக்கூடிய விஷயங்களையும் சூழல்களையும் நாம் எந்த அளவுக்குத் தவிர்க்கிறோமோ அந்த அளவுக்கு பதற்றம் நமக்கு அதிகரிக்கும். நமக்குப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல்களும் கூடிய விரைவில் அதிகரிக்கும். வாழ்க்கை மிகமிகக் குறுகியதாகவும் இந்த உலகமே மிகவும் அச்சுறுத்தும் விஷயங்கள் நிறைந்த ஒரு இடமாகவும் ஆகிவிடும்.

நம் சட்டைப் பைக்குள்தான் ஒரு சாதனம் இருக்கிறதே. எல்லா சமயங்களிலும் எல்லாவற்றையும் நாம் தவிர்த்துவிட்டுப் போவதற்கு அந்த சாதனம்தான் நமக்கு உதவுகிறதே. மனப்பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு சாதனம் என்றுதான் ஆரம்பத்தில் நான் நினைத்தேன். ஆனால், நமது கைபேசி நமது பிரச்சினையைத் தீவிரப்படுத்திவிடுகிறது என்பதை விரைவிலேயே கண்டறிந்தேன். அது நமது சுயமதிப்பைக் குறைத்து, பயங்களை அதிகரித்து, வாழ்க்கையை மிகவும் குறுக்கி, முடிவே இல்லாமல் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கச் செய்துவிடுகிறது.

சமூக ஊடகங்களால் மனநலனில் ஏற்படும் பாதிப்பைப் பற்றிய நிறைய ஆய்வுகள் வந்துவிட்டன. மனஅழுத்தத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் காலம் இது. 35 வயதுக்குட்பட்டோரின் மரணங்களில் தற்கொலைதான் முதலிடம் வகிக்கிறது என்பதை மேற்கண்ட பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். ஆகவேதான், நமது யுகம் ‘மனப்பதற்றத்தின் யுகம்’ என்று அழைக்கப்படுகிறது. இரவில் வெகு நேரம் உங்களைக் கண்விழிக்க வைக்கும் கணினியின் பிரகாசமான ஒளி என்பது நாம் புரிந்துகொண்டிருப்பதை விட மிகவும் சிக்கலானது. ஆனால், நமது பிரச்சினையிலிருந்து நம்மை விடுவிடுப்பது கணினித் திரையால் முடியவே முடியாது.

நீரில் வட்டமடித்து நீந்தும் வாத்துக்கள் வீடியோவை எனது கைபேசியில் பார்க்க ஆரம்பித்தேன். பீதியின் இடத்தையும் பயத்தின் இடத்தையும், இப்போது ஒருவிதப் பதற்றமும் சுயவெறுப்பும் எடுத்துக்கொண்டன. இந்த பூமியில் நான் இருக்கப்போவதே மிகச் சிறிய கால அளவு! அந்தக் கால அளவுக்குள் ஒரு ஒன்றரை மணி நேரத்தை எனது வாழ்க்கையைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் பரிதவிப்புடன் செலவிட முயன்றேன். வாழ்க்கையைத் தவிர்ப்பதற்காக நான் செய்ததெல்லாம் என் கைபேசித் திரையில் வட்டமடித்துக்கொண்டிருந்த வாத்துக்களை வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததுதான். அடக் கடவுளே!

எனது ஹெட்போனை எடுத்துவிட்டுக் கைபேசியைத் தள்ளிவைத்தேன். எனது இருக்கையில் முட்டி போட்டபடி அந்த பெட்டியில் உட்கார்ந்தவர்களைப் பார்த்தேன். யாரும் என்னை ஏறிட்டுப் பார்க்கவில்லை. எல்லோரும் தங்கள் சாதனங்களின் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எதிலிருந்து தப்பிக்க அவர்கள் இப்படிச் செய்துகொண்டிருக்கிறார்கள்?

நாம் அனைவரும் இணையத்தை ஒரு தப்பித்தலுக்காகவே பயன்படுத்துகிறோம். இணையத்திடம் அடிபணிய நாமெல்லோரும் ஏதாவது காரணம் வைத்திருக்கிறோம். மன அழுத்தம், பதற்றம், சலிப்பு என்று ஏதேதோ காரணங்கள். இணையம் என்பது எப்போதும் நம் விரல் நுனியில் இருப்பதால் நமது பலவீனமான தருணங்களுக்காக அது எப்போதும் காத்திருக்கிறது. அமைதியையும் சலிப்பையும் கண்டு மட்டுமல்ல, நமது சொந்த எண்ணங்களை எதிர்கொள்வதற்கும்கூட நாமெல்லோரும் அஞ்சுகிறோம்.

மனப்பதற்றப் பிரச்சினை உள்ளவர்கள் மட்டுமல்ல, ரயிலில் உள்ளவர்களும், ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க முடியாதவர்களாகிய எல்லோருமே அப்படித்தான். அப்படி வேடிக்கை பார்த்தால் ஏதாவது துயரமான, அசௌகரியமான உணர்வுகள் ஏற்படும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

நாம் எல்லோரும் சாதாரண வகைக் கைபேசிகளுக்கும் மேசைக் கணினிகளுக்கும் மாற வேண்டும் என்று நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் சொல்வதே வேறு. நமது மன உளைச்சலைத் தவிர்ப்பதற்காக இணையத்தை நோக்கிச் செல்வதென்பது மேலும் மேலும் நமக்குள் பீதியை வளர்க்கத்தான் செய்யும்; மன அழுத்தத்தைத் தவிர்க்க நினைத்தால் நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் அதிகரிக்கும்; சலிப்பைத் தவிர்க்க நினைப்பதால் நமக்குச் சலிப்பூட்டும் விஷயங்கள் அதிகரிக்கும். இதையெல்லாம் நாம் உணர வேண்டும் என்பதைத்தான் நான் சொல்கிறேன். நமது பயத்துக்கும் நமக்குமிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்திக்கொள்வதில் நாம் பெரும் வித்தகர்களாக ஆகிவிட்டோம். யதார்த்தத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று எப்போதும் ஏங்கிக்கொண்டே இருப்பதால் பிரச்சினைகளின் தீவிரம் அதிகரிப்பது மட்டுமல்ல, பிரச்சினைகளைப் புதிதாக உண்டுபண்ணவும் கூடும். நமது சுயமதிப்பையும் தூக்கத்தையும் காலிசெய்துவிடுவது மட்டுமல்லாமல் இந்த உலகத்தையும் வாழ்க்கையையும் அதன் யதார்த்தத்தையும் எதிர்கொள்ளும் திறனை நமக்கு இல்லாமல் ஆக்கிவிடும்.

பீதித் தாக்குதலிலிருந்து நான் விடுபட்டபோது எனக்கு நானே ஒன்று சொல்லிக்கொண்டேன்: ‘அடுத்த முறை இப்படி நிகழ்ந்தால் எனது கைபேசியை வெளியில் எடுக்க மாட்டேன். அமைதியாக உட்கார்ந்தபடி எனது பயத்தை எதிர்கொள்வேன். எனது அறிவைக் கொண்டு அதை அடித்துக் கீழே சாய்ப்பேன்.’

நான் இறங்குமிடம் வந்தது. இறங்குவதற்கு முன்பு பெட்டியில் இருந்த எல்லோரையும் பார்த்தேன். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரும் தங்கள் சாதனங்களின் திரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

©தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

ஒருவேளை நாம் கருந்துளைக்குள் விழுந்து விட்டால்? (வீடியோ இணைப்பு)

 
அண்டவெளியில் காணப்படும் கருந்துளை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய விசித்திரம். விடை இன்னும் காணமுடியாத ஆச்சரியமான அப்பகுதியை அறிந்துகொள்வதில் அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ஆர்வம் உண்டு.

கருந்துளையை அறிவோம்!

அந்த கருந்துளை வாய்பரப்பு, சுமார் நம் பூமியை உள்ளே போடுகிற அளவுக்கு மிகப்பெரியதாக உள்ளது.

வெளியிலிருந்து பார்க்க உள்ளே ஒன்றுமே அறிய இயலாத அடர்த்தியான இருள்வெளி மட்டுமே தெரிகிறது.

அதற்கு காரணம், அந்த கருந்துளையின் மையம் முடிவில்லாத தூரமுடையது(Points at Infinity). ஒளி சென்றாலும் மீளமுடியாது. அதுவே அடர் இருளுக்கு காரணம்.

அதனுள்ளே எந்த ஒரு வடிவமோ எல்லையோ காலநேரமோ இல்லாத பயங்கரமுடையது. அது அறியமுடியாத மூர்க்கமான காலியிடமாக உள்ளது.

அது அறிவியலுக்கே செக் வைத்த இயற்கை சக்தியின் இருப்பிடம் எனலாம்.

அதில் விழுந்தால் என்னாவோம்?

ஒருவேளை நாம் அதற்குள் சென்றால், என்னாவோம் என்பதை அறிய ஆர்வம்கொள்கின்றனர்.

கருந்துளைக்குள் அகப்பட்டால் அந்த உணர்வு ஒரு நெருக்கமானதாக இருக்கும் அது எப்படி என்றால், டூத் பேஸ்ட் அதன் குழாயிலிருந்து பிதுங்கி வழிவதுபோல இருக்கும் என American Museum of natural hystory's hayden Planetarium த்தில் பணிபுரியும் வான் அறிவியலாளர் சார்லஸ் லியூ கூறுகிறார்.

மேலும், பூமியின் மேற்பரப்பில் திடப்பொருள்கள் உறுதியாக அசைவற்று இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளில் பூமியின் ஈர்ப்புசக்திக்கும் நிலவின் குறைவான ஈர்ப்பு சக்திக்கும் இடையிலான தாக்கமே கடலில் அலைகள்.

பூமியின் உறுதியான ஈர்ப்பில் உள்ள கடலில் சந்திரனின் இருப்பு மற்றும் ஈர்ப்புக்கு ஏற்பவே அலைகள் பரவுகின்றன. ஆதே ஒருங்கிணைப்பு விளைவுதான் கருந்துளைக்குள் நாம் அடியெடுத்து வைக்கும்போதும் ஏற்படுகிறது என்கிறார்.


நீரில் டைவ் அடிப்பதுபோல, தலையை கருந்துளைக்குள் நுழைத்து, பாதங்களை பிற்பகுதியாக்கிக் கொண்டால், நாம் தலையில் உணர்கிற ஈர்ப்பைவிட கால்விரல்களில் உணரப்படுவது குறைவாக இருக்கும்.

ஒளியின் வேகத்தில் அதனுள்ளே பயணிக்கக்கூடும். அதனுள்ளே சென்ற பிறகு, நமக்கு முன்னே பொருள் ஏதும் பயணித்தாலும் பார்க்க முடியும். அதுபோல பின்னே தொடரும் பொருளையும் பார்க்க முடியும். ஆனால், வினாடிகளுக்கும் குறைவான கால இடைவெளி கூட அளவிடமுடியாத தூர இடைவெளியை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
கருந்துளைதான் பிரபஞ்ச மையமா?

கருந்துளைக்குள்ளே சென்று அதைப்பற்றிய ரகசியங்களை அறிந்துகொண்டால், அது பிக் பேங் உட்பட பிரபஞ்ச ரகசியங்களைப் பற்றியும் முழுமையான புரிதலை ஏற்படுத்தும் என்பது உண்மை. என்றும் கூறியுள்ளார்.

ஆன்மீகத்திலும் ஏக பிரம்மம் என்ற இருள் மூலத்திலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்று ஞானிகள் கூறியுள்ளனர். அறிவியலும் அந்த நம்பிக்கையை நோக்கியே நகர்வது ஆரோக்கியமான ஆய்வு ஒருங்கிணைப்புதான்.